ADDED : மார் 24, 2025 07:00 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், பா.ஜ., சார்பில், புது தேசிய கல்வி கொள்கை குறித்து விளக்கும் நிகழ்ச்சி கடந்த, 21ல் நடந்தது. அதில், மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். பேனரில் கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
மக்கள் கையெழுத்திட, பேனரை வைத்திருந்தனர். மறுநாள் மதியம், அந்த பேனரை சிலர் கிழித்து எறிந்துவிட்டு, இரும்பு பிரேமை துாக்கிச்சென்றனர். ஏற்கனவே கடந்த, 13ல், பனமரத்துப்பட்டியில் பா.ஜ., சார்பில் நடந்த பட்டிமன்றம், பொதுக்கூட்டத்துக்கு, 5 இடங்களில் வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது. அதுகுறித்து, பா.ஜ., நகர தலைவர் ராஜா புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கும் நிலையில், மீண்டும் பேனர் கிழிப்பு சம்பவம் நடந்துள்ளது.