/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மார் 06, 2024 06:45 AM
வீரபாண்டி : ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த பிப்., 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று குண்டம் இறங்குதல் நடந்தது. அதில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், காலையில் திருமணிமுத்தாற்றுக்கு சென்று புனிதநீராடி, மேள, தாளம் முழங்க சக்தியை அழைத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் எழுப்பி, தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மேலும் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆடு கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு, சர்வ அலங்காரத்தில் காளியம்மளை, சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலாவாக கொண்டுவரச்செய்தனர். வரும், 12ல் மறுபூஜையுடன் மாசி திருவிழா நிறைவு பெறும்.
பால்குட ஊர்வலம்இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 20ல் தொடங்கியது. அதன், 15ம் நாள் விழாவான நேற்று, திரளான பெண்கள் பால்குடங்களை எடுத்துக்கொண்டு, செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தீர்த்தக்குடம்மேட்டூர், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள பெரிய பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு, தீ மிதித்தல், இரவு, 7:00 மணிக்கு பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மதியம், 1:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மார்ச், 9 காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

