/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
/
காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED : ஜன 16, 2025 06:47 AM
இளம்பிள்ளை: இளம்பிள்ளை மோட்டூர் காளியம்மன் கோவில் தை திருவிழா நேற்று முன்தினம் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று குண்டம் இறங்கும் விழா நடந்தது.
மூலவர் காளியம்மனுக்கு, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் செய்து வெள்ளி கவசம், பூக்கள் அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காப்புக்கயிறு கட்டி விரதமிருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, குண்டம் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் தை திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.
தண்டு மாரியம்மன்
அதேபோல் தாரமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் தைப்பொங்கல் திருவிழாவையொட்டி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம், பின் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா, அப்துல் கலாம் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிலம்பாட்டம் நடந்தது. இன்று காலை காவேரி தீர்த்தம், மாலை அக்னி கரகம் அழைத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.