/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரி ஆற்றில் துார்வாரும் பணி துவக்கம்
/
காவிரி ஆற்றில் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : மார் 01, 2026 08:29 AM
ஈரோடு: காவிரி ஆற்றின் படித்துறை பகுதிகளில், துார் வாரும் பணிகள் துவங்கியுள்ளன.ஈரோடு காவிரி ஆற்றின், பள்ளிப்பாளையம் செல்லும் காவிரி ஆற்று பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள கழிவுகள், சகதி, மண் போன்றவை தேங்கி காணப்படுகிறது. படித்துறை பகுதியிலும், படித்துறை இல்லாத பகுதியிலும், தினமும் ஏராளமானோர் குளிப்பது, துணிகளை அலசுவது, மீன் பிடிக்க செல்வோர், துணிகளை உலர வைப்போர் என நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்வர்.
அதேநேரம், ஆற்றில் கொட்டப்படும் குப்பை, சகதியுடன் கூடிய மண்ணும் கரை ஓரம் மேடாக உள்ளதால், அங்கு அதிகமாக தேங்கி காணப்படுகிறது. இவற்றை அகற்றி, பொதுமக்கள் ஆற்றுக்குள் நடந்து செல்லவும், தண்ணீர் வரும் காலங்களில் படித்துறை மற்றும் படித்துறை இல்லாத இடங்களில் குளித்து, துணிகளை துவைக்க வழி செய்ய வேண்டும் என, கோரினர்.இதன்படி மாநகராட்சி, பொது அமைப்புகள் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இயந்திரம் மூலம் சகதி, மண், குப்பை தேங்கிய இடங்களை துார்வாரி கரைக்கு வெளியே கொட்டுகின்றனர். மேலும், புதையும் வகையில் சகதியாக உள்ள இடங்களில் சகதியை மட்டும் அகற்றிவிட்டு, அங்கு மண் கொட்டி சமன் செய்துள்ளனர்.
படித்துறை பகுதி, அங்கு குளிப்போர் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள கம்பிகள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, துாய்மை பணி செய்து வருகின்றனர். இப்பணி, ஒரு வாரத்துக்கு நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

