/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் நாய்கள் கடித்து கோசாலை கன்றுக்குட்டி பலி
/
கோவிலில் நாய்கள் கடித்து கோசாலை கன்றுக்குட்டி பலி
ADDED : நவ 13, 2024 10:52 PM
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. அங்கு நேற்று காலை, 5:00 மணிக்கு, 5 மாத கிடா கன்றுக்குட்டியை நாய்கள் கடித்தன.
கோவில் நிர்வாகத்தினர் அளித்த தகவலின்படி, கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தனர்.
சிறிது நேரத்தில் கன்றுக்குட்டி இறந்தது. கால்நடை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பரணிதரன் உள்ளிட்ட குழுவினர், கன்றுக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து பரணிதரன் கூறுகையில், ''கிடா கன்றுக்குட்டியை இரண்டு நாய்கள் கடித்திருக்கலாம். கன்றுக்குட்டியின் கழுத்துப் பகுதியில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
இதற்கிடையே சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், மின்னஞ்சல் மூலம் கால்நடை, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.
அதில், 'சுகவனேஸ்வரர் கோவிலில் கோ பூஜை தற்போது நடத்துவதில்லை. இதனால் சரிவர பராமரிப்பு இல்லாததே, இதுபோன்ற இறப்புக்கு காரணம். அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், சுகவனேஸ்வரர் கோவில், கோசாலை தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க, சேலம் இணை கமிஷனர் சபர்மதிக்கு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

