ADDED : செப் 09, 2026 06:13 AM
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி பாலமலையில்
சில வாரங்களாக ஒரு சிறுத்தை சுற்றித்திரிந்து ஆடு, மாடு, நாய்களை
கடித்துக்கொன்று வருகிறது.
நேற்று அதிகாலை பாலமலை அடிவாரம்,
செட்டியூரில் புகுந்த சிறுத்தை, கசாப்பு கடை நடத்தும் முருகேசன், 45,
என்பவர் கட்டி வைத்திருந்த ஒரு செம்மறி ஆட்டை கடித்து ரத்தத்தை
உறிஞ்சியது. பின் ஆட்டை அதே இடத்தில் போட்டு விட்டு, சிறுத்தை
அங்கிருந்து மலைப்பகுதிக்கு சென்றுவிட்டது.மேட்டூர்
வனச்சரகர் செங்கோட்டையன், கொளத்துார் போலீசார்,
வருவாய்த்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தை கடித்த ஆட்டை
பார்வையிட்டு, அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர். அப்போது அங்கு கூடிய
மக்கள், 'சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால்
சாலை மறியலில் ஈடுபடுவோம்' என்றனர்.
அதற்கு வனச்சரகர்
செங்கோட்டையன் கூறுகையில், ''கண்ணாமூச்சி ஊராட்சியில்
நெடுஞ்செழியன் நகர், கொடம்பாடு, மூலக்கடை மேற்கு, சென்னம்பட்டி வன
எல்லை என, 4 இடங்களில் கூண்டுகள், 6 இடங்களில் கேமரா வைத்து,
சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வனத்துறை இழப்பீடு
கண்ணாமூச்சி,
காவலாண்டியூரை சேர்ந்தவர் சரோஜா, 70. இவருக்கு சொந்தமான, 6
ஆடுகளை, கடந்த, 3ல் சிறுத்தை கடித்துக்கொன்று விட்டு, ஒரு ஆட்டை
பிடித்துச்சென்றது. இதனால் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு, கடந்த, 3ல்
கொளத்துார் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன், 10,000 ரூபாய் உதவித்தொகை
வழங்கினார். தொடர்ந்து வனத்துறை சார்பில் நேற்று, 42,000 ரூபாய்
இழப்பீடாக, வனச்சரகர் செங்கோட்டையன் வழங்கினார். தவிர
செங்கோட்டையன், அவரது தனிப்பட்ட விருப்பத்தில், 10,000 ரூபாய்
வழங்கினார்.
