/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரு குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி
/
இரு குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி
ADDED : அக் 07, 2025 01:30 AM
சேலம், சேலம் லைன்மேடு, அயூப்கான் மனைவி ஜெரினா, 25. இவர் தன்னுடைய, 6 வயது மகள், 4 வயது மகனுடன், மனு அளிக்க நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, போலீசார் சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல், தீக்குளிக்க முடிவெடுத்து, மண்ணெண்ணெய் கொண்டு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
எனக்கு, 2019ல் திருமணம் நடந்தது. கணவர் அயூப்கான், 34, தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். திருமணத்தின் போது, 5.5 பவுன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. ஆனால் இரு மாதத்துக்கு பின், மேலும் நகை, பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். எனினும், சமாளித்து குடும்பம் நடத்திய நிலையில், கணவரும், மாமியாரும் சேர்ந்து, வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தனர். வியாபார அபிவிருத்திக்கு பணம் கேட்டு, கணவர் தொடர்ந்து மிரட்டினார்.
இந்த சித்ரவதையை தாங்க முடியாமல், 2 ஆண்டுகளுக்கு முன், இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மனவேதனையில் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே, இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று, கலெக்டர் அலுவலகம் வந்தேன்.
இவ்வாறு கூறினார்.