/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெ.தி.க., பிரமுகர் கொலை; தளி எம்.எல்.ஏ., ஆஜர்
/
பெ.தி.க., பிரமுகர் கொலை; தளி எம்.எல்.ஏ., ஆஜர்
ADDED : நவ 22, 2024 06:47 AM
சேலம்: பெ.தி.க., பிரமுகர் கொலை வழக்கில், தளி எம்.எல்.ஏ., சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதே வழக்கில் ஆஜராகாத மற்றொருவருக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் பழனி. இவர், 2012 ஜூலை, 5ல் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டித்தும் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் இலகுமையா உள்பட, 25 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு, வழக்கு மாற்றப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூன், 8ல் விசாரணைக்கு வந்தது. 3 பேர் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மீண்டும் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அதில், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்பட, 21 பேர் ஆஜராகினர். அதில் மஞ்சுநாத் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, விசாரணையை நவ., 28க்கு ஒத்திவைத்து, நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.