ADDED : மே 29, 2025 01:57 AM
சேலம் சேலம், புது ரோட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி கண்ணன், 45. இவர், இவருக்கு சொந்தமான, 7,000 சதுரடி நிலத்தை அளவீடு செய்து தரும்படி, மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவையாளரிடம் மனு வழங்கினார்.
அதற்கு நில அளவையாளர் சங்கர், 'நில அளவீடு செய்து தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றித்தர, 22,000 ரூபாய் வழங்க வேண்டும். அதற்கு முன்பணம், 5,000 தர வேண்டும்' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கண்ணன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள், ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை, கண்ணனிடம் கொடுத்து அனுப்பினர். பின் அவர், சங்கருக்கு பணம் கொடுப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அறிவுறுத்தல்படி, சோளம்பள்ளத்தில் உள்ள பேக்கரியில் நேற்று காலை கண்ணன் காத்திருந்தார். லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையில் போலீசாரும் மறைந்திருந்தனர்.
தொடர்ந்து சங்கர் வந்து கண்ணனிடம் பணத்தை பெற்றார். அப்போது அவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.