/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்
/
உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்
உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்
உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று மனைவியை போலீசில் ஒப்படைத்த தாசில்தார்
ADDED : பிப் 04, 2025 08:22 PM
இடைப்பாடி:கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக, அவர் உயிரோடு இருக்கும் போதே, இறப்புச் சான்று பெற முயன்ற பெண்ணை, இடைப்பாடி தாசில்தார் போலீசில் ஒப்படைத்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி வீட்டுவசதி குடியிருப்பில் வசிப்பவர் விஜயகுமார், 48. பத்தாம் வகுப்பு படித்துள்ள இவருக்கும், காங்கேயத்தை சேர்ந்த ரேவதி, 40, என்பவருக்கும், 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, 17, 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். பணம் சம்பந்தமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற விஜயகுமார், கடந்தாண்டு ஜூலையில் ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த நாள் முதலே விஜயகுமாருக்கும், ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன், ஓசூர் சென்ற விஜயகுமார், அங்கேயே தங்கி வேலை பார்த்தார்.
இந்நிலையில் ரேவதி, தன் கணவரை காணவில்லை என இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கடந்தாண்டு செப்., 12ல், புகார் கொடுத்தார். போலீசாரும் ஒரு மாதம் கழித்து அக்.,24ல் விஜயகுமாரை காணவில்லை என வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், பவானி போலீஸ் ஸ்டேஷனில், தன் கணவரை காணவில்லை எனக்கூறி ரேவதி புகார் கொடுத்துள்ளார். கடந்தாண்டு நவ., 2ல் பவானி தாலுகா, சன்னியாசிப்பட்டி பகுதியில் ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய ஆண் சடலம், தன் கணவர் தான் என பவானி போலீசில் ரேவதி கூறினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு பதிவை வைத்து உயிரோடு இருக்கும் விஜயகுமாருக்கு, பவானி பேசலீசார் இறப்புச் சான்று கொடுத்தனர்.
இந்த இறப்புச் சான்றை பெற்ற ரேவதி, வாரிசு சான்றிதழ் கோரி இணையம் மூலம் இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வாரிசு சான்று குறித்து விசாரணை செய்த இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், விஜயகுமார் உயிரோடு இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து ரேவதியையும், அவருக்கு தெரியாமல் அவரது கணவர் விஜயகுமாரையும் நேரில் வரவழைத்து விசாரித்தபோது, கரூரில் இருக்கும் தன் கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்காக இறப்பு சான்று பெற்றதும், தற்போது வாரிசு சான்று பெற முயற்சித்ததும் தெரியவந்தது.
இது குறித்து இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், போலீசாரை வரவழைத்து அவர்களிடம், ரேவதியை ஒப்படைத்தார். இடைப்பாடி தாலுகா ஆவணிப்பேரூர் மேல்முகம் வி.ஏ.ஓ., பர்வேஸ் சபையர் கொடுத்த புகாரையுடுத்து, ரேவதியை இடைப்பாடி போலீசார் கைது செய்தனர்.