/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா இரு தரப்பினர் கைகலப்பு
/
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா இரு தரப்பினர் கைகலப்பு
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா இரு தரப்பினர் கைகலப்பு
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா இரு தரப்பினர் கைகலப்பு
ADDED : அக் 23, 2024 01:45 AM
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா
இரு தரப்பினர் கைகலப்பு
ஆத்துார், அக். 23-
மாணவரை கண்டித்து பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் முன்னிலையில் இரு கவுரவ விரிவுரையாளர்கள், மற்ற பேராசிரியர்களிடம் வாக்குவாதம் செய்ய கைகலப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் திருமாவளவன், 40; வக்கீலான இவர், வி.சி., பேரூர் செயலராகவும் உள்ளார். தற்போது ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், எம்.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 17ல், முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது, திருமாவளவன், இயற்பியல் துறை தலைவர் குமார் உள்ளிட்ட பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியதாக, கல்லுாரி முதல்வர் செல்வராஜிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் அறை முன், 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதல்வர் பேச்சு நடத்தினார். அங்கு வந்த தாவரவியல் துறை கவுரவ விரிவுரையாளர்கள் மணிகண்டன், சுபாஷ், 'முதல்வரிடம் கொடுக்கும் மனுவில், 'அனைத்து ஆசிரியர்கள்' என எதற்கு குறிப்பிட்டுள்ளீர்கள்' என கேள்வி எழுப்பினர்.
அப்போது ஒருவருக்கு ஒருவர் திட்டியபடி முதல்வர் முன்னிலையில், மணிகண்டன், சுபாஷ் ஒரு தரப்பாகவும், மற்றவர்கள் ஒரு தரப்பாகவும் தாக்கிக்கொண்டனர். இதைப்பார்த்து மாணவ, மாணவியர் திரண்டனர். மற்ற ஆசிரியர்கள், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
ஆத்துார் ஊரக போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து பேராசிரியர்கள், கல்லுாரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இரு கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர், 'இருதரப்பு புகார் மீதும் விசாரிக்கப்படும். இதுதொடர்பாக கல்லுாரி கல்வி இயக்குனருக்கு தகவல் அளித்துள்ளோம். அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்' என்றார். மதியம், 2:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.
பின் சுபாஷ், மணிகண்டன் ஆகியோர், பேராசிரியர்கள் கண்ணன், குமார், தமிழ்மணி ஆகியோர் தாக்கியதாக கூறி, முதல்வரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 'கடந்த, 17ல் துறை தலைவர் குமார், சினிமா காதல் பாடல்களை பாடியபடி கேலி செய்தார். அவரது குடும்பத்தினரும் மிரட்டல் விடுத்தனர். நான் ஒருமையில் பேசவோ, கொலை மிரட்டலோ விடுக்கவில்லை. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன்,'' என்றார்.
முதல்வர் செல்வராஜிடம் கேட்டபோது, ''மாணவர் புகார் மட்டுமின்றி இன்று(நேற்று) தகராறு செய்தவர்களின் இருதரப்பு புகாரும் பெறப்பட்டு கல்லுாரி கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

