அடிப்படை வசதியை மேம்படுத்துவதில் கவனம் மேற்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் வாக்குறுதி
அடிப்படை வசதியை மேம்படுத்துவதில் கவனம் மேற்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 06, 2026 05:34 AM

சேலம்:சேலம் மேற்கு தொகுதி, த.வெ.க., வேட்பாளர் லட்சுமணன், 'விசில்' சின்னத்துக்கு ஓட்டு கேட்டு, தொகுதி முழுதும் வலம் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேற்கு
தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள்
அவதிப்பட்டு வருகின்றனர். சாலை இல்லாதது, கழிவுநீர் வடிகால்
பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சேவை குறைவு உள்ளிட்ட
பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளதாக, மக்கள் தெரிவித்தனர்.
செங்கல்பேட்டை
மயானத்தில் இருந்து வெளியேறும் புகை, அருகிலுள்ள வீடுகளுக்கு
செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய
அரசு நிலம் இருப்பதாகவும், அதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செல்வகணபதி கோவில்
கார்னர் மற்றும் தெய்வநாயகி பள்ளி அருகே கழிவுநீர் வடிகால் வசதி
இல்லாததால், சுகாதார சிக்கல் நிலவுகிறது. புதுமாரியம்மன் மற்றும்
மாரியம்மன் கோவில்கள், நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதும்,
பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகரமடை சாலை -
திருமடைநகரில் சாலை மற்றும் கழிவுநீர் வசதிகள் போதிய அளவில்
இல்லாதது குறித்து, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல் நல்ல
குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை
விடுத்தனர்.
சரட்டியூர் மாரியம்மன் கோவில் மைதான பகுதியில்
போதைப்பொருட்கள் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படும்
நிலையில், அங்கு சிறு அளவில் விளையாட்டு மைதானம், நுாலகம் அமைக்க, மக்கள்
வலியுறுத்தினர்.
ஏரிக்கரை ரோட்டில், சாலை வசதி மேம்படுத்தப்பட
வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ஏரியை பாதுகாப்பாக பராமரித்து அதன்
சுற்றுப்புறத்தில் பூங்கா, நடைபாதை அமைக்கவும் மக்கள் கோரிக்கை
விடுத்தனர். குறிப்பாக மாலையில் பாதுகாப்பு வசதி இல்லாததால் அச்சம்
நிலவுவதாக தெரிவித்தனர்.
இவை எல்லாம் நான் ஆய்வு செய்தபோதும்,
மக்களிடம் கோரிக்கைகளை கேட்டபோதும் தெரியவந்தது. அதனால்
இத்தொகுதியில் நீண்டகாலமாக நிலவும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு,
நடைமுறை தீர்வுகளை கொண்டு வர உறுதியுடன் செயல்படுவேன். அதற்கு ஒரு
வாய்ப்பு கொடுங்கள்.
இத்தேர்தல் மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை
ஏற்படுத்தும் முக்கியமான தருணம். முக்கியமாக, அடிப்படை வசதிகளை
மேம்படுத்தும் பணியில் முழு கவனம் செலுத்துவேன். அதனால் சேலம் மேற்கு
தொகுதி வளர்ச்சிக்கு, மக்கள் ஒன்றிணைந்து சரியான முடிவை எடுக்க
வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
