ADDED : ஆக 20, 2025 03:07 AM
கொங்கணாபுரம்:நாய் கடித்து, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட தறி தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், லகுவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 43; தறித்தொழிலாளியான இவர், நாய் வளர்த்து வந்தார். அந்த நாய், மூன்று மாதங்களுக்கு முன் தெருவில் செல்பவர்களை விரட்டி கடித்துள்ளது. அவரது மகனையும் கடித்தது.
ஆத்திரமடைந்த குப்புசாமி, நாயை அடித்துள்ளார். அப்போது, அவரது காலிலும் நாய் கடித்துவிட்டது. மற்றவர்களும், மகனும், நாய் கடி தடுப்பூசியை போட்டுக்கொண்ட நிலையில், குப்புசாமி தடுப்பூசி போடாமல் விட்டார்.
இந்நிலையில், ஒரு வாரமாக வெளியே செல்வதை குறைத்துக்கொண்டு, தண்ணீரை பார்த்தாலே பயந்து அலறியுள்ளார். நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு, பரிசோதனையில், 'ரேபிஸ்' நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர்.