/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் 6 மாதத்தில் சாலை விபத்தில் 230 பேர் பலி
/
மாவட்டத்தில் 6 மாதத்தில் சாலை விபத்தில் 230 பேர் பலி
மாவட்டத்தில் 6 மாதத்தில் சாலை விபத்தில் 230 பேர் பலி
மாவட்டத்தில் 6 மாதத்தில் சாலை விபத்தில் 230 பேர் பலி
ADDED : ஆக 05, 2024 10:18 PM
சிவகங்கை, - சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினந்தோறும் விபத்துக்கள் நடக்கின்றன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 952 சாலை விபத்துக்கள் நடந்தன. இந்த விபத்துக்களில் 261 பேர் மரணமடைந்தனர். 2016ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 322 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 333 பேர் மரணமடைந்துள்ளனர். 2017ம் ஆண்டு மொத்தம் ஆயிரத்து 112 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 295 பேர் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 853 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 244 பேர் மரணமடைந்துள்ளனர்.
2019ம் ஆண்டு 977 சாலை விபத்துக்களில் 265 மரணமடைந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 804 சாலை விபத்துக்களில் 146 பேர் மரணமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டில் 954 சாலை விபத்துக்களில் 325 பேர் மரணமடைந்தனர். 2022ம் ஆண்டு ஆயிரத்து 96 விபத்துக்களில் 394 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆயிரத்து 227 விபத்துக்களில் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜன. முதல் ஜூன் வரை 630 விபத்துக்களில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் காயமடைந்தனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக மட்டும் 6300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிவகங்கை பகுதியில் 180 விபத்துக்கள் நடந்துள்ளது இதில் 50 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 300க்கும் மேல் உள்ளது. 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்த நிலையில் விபத்து மரணங்கள் குறைந்தன. அதற்குப்பிறகு தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதில் டூவீலர் விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம்.
டூவீலர் மீது கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதியது உள்ளிட்ட சம்பவங்களால் இந்த விபத்துக்கள் நடந்துள்ளன. சாலைகளில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்துார், காரைக்குடி பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன. டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். வாகன எண்ணிக்கைஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால் விபத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து அரசும் போக்குவரத்து போலீசாரும் வலியுறுத்துகின்றனர். டூவீலர் விபத்துகளில் மரணம் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமலும் மது அருந்திவிட்டு சென்று விபத்தில் சிக்குகின்றனர்.