ADDED : மே 07, 2024 05:28 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏரியூர், எஸ்.மாம்பட்டி, சந்திரபட்டி, மல்லாக்கோட்டை பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் இருந்தும் பல்வேறு காரணங்களால் தரிசாகவே கிடக்கின்றன. விவசாயம் செய்ய முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும் நிலையில் மாட்டின் சாணத்தை சேகரித்து காயவைத்து விற்கின்றனர். பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மூடைகளில் சாணத்தை வாங்கி செல்கின்றனர்.
ஒரு மூடைக்கு 60 ரூபாய் வரை விலை கொடுக்கிறார்கள். சாணத்தை கேரளா பகுதிகளில் தேயிலை, வாழை உள்ளிட்டவைகளுக்கு உரமாகப் போடுகின்றனர்.
விவசாயம் கைவிட்ட நிலையிலும் மாட்டுச்சாணம் விற்பனை கைகொடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.