/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவன் கொடூர கொலை உறவினர்கள் மறியல்
/
சிறுவன் கொடூர கொலை உறவினர்கள் மறியல்
ADDED : செப் 03, 2024 02:29 AM

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா என்பவர் மகன் பிரவீன், 17. கோவையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கீழப்பசலைக்கு, மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நண்பர்களோடு டூ - வீலரில் வந்தார். எதிரே ஒரு டூ - வீலரில் வந்த சிலர் அவர்களை மறித்தனர்.
பிரவீன் மட்டும் அவர்களிடம் சிக்கினார்; நண்பர்கள் தப்பினர். அந்த சிறுவன் நேற்று காலை, தீயனுார் கண்மாயில் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
கீழப்பசலை கிராம மக்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், நேற்று காலை 9:00 மணியிலிருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேசி, கலைந்து போக செய்தனர். மூன்று மணி நேரத்திற்கு பின், போக்குவரத்து இயல்பானது.
மானாமதுரை போலீசார் கூறுகையில், 'முன்பகை காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர்' என்றனர்.