ADDED : மார் 07, 2025 08:05 AM

திருப்புவனம: திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள நிலையில் வளாகத்தில் உள்ள மரங்களை அகற்றாமல் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் அருகே 20 சென்ட் பரப்பளவில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களில் உள்ள நிலங்கள் , கட்டடங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டடம் 1882 ஆண்டு கட்டப்பட்டது. அலுவலகத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி, நெட்டிலிங்கம், இலவம்பஞ்சு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மரங்கள் நிழல் தந்து வருகின்றன. கட்டடம் பல இடங்களில் சேதமடைந்து மழைகாலங்களில் மழை நீர் உள்ளே வருவதால் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் திருப்புவனம் புதுாரில் ஏற்கனவே தாலுகா அலுவலகம் செயல்பட்ட கட்டடத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்து விட்டு புதிய கட்டடம் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.
பொதுமக்கள் கூறுகையில்: அலுவலகத்தைச் சுற்றியுள்ள மரங்கள் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும், இனி மரங்கள் வளர்க்க வாய்ப்பில்லை. இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும், இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாமல் இருப்பதற்கு அலுவலகத்தைச் சுற்றியுள்ள மரங்களும் காரணம் ஆகும். எனவே மாவட்ட நிர்வாகம் அலுவலகத்தைச் சுற்றியுள்ள மரங்களை அகற்றாமல் புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.