/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கம்பு சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
/
திருப்புவனத்தில் கம்பு சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
திருப்புவனத்தில் கம்பு சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
திருப்புவனத்தில் கம்பு சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
ADDED : ஜூன் 18, 2024 07:04 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் நெல் விவசாயிகள் பலரும் கம்பு பயிரிட தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் போதிய கோடை மழை இல்லாதததால் நெல் சாகுபடி விவசாயிகள் கம்பு தானிய விவசாயத்திற்கு மாறியுள்ளனர். திருப்புவனம் பகுதியில் ஜனவரியில் நெல் அறுவடைக்கு பின் குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.
செப்டம்பரில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் ஒரளவிற்கு உயரும். ஆனால் இந்தாண்டும் வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததுடன் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் சேரவில்லை.
இதனால் நிலத்தடி நீரும் உயரவில்லை. இதனால் கிணறு வைத்துள்ள விவசாயிகளுக்கு அவர்களது தேவைக்கே தண்ணீர் இல்லாததால் மற்றவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. ஓடாத்தூர், வில்லியரேந்தல், பழையனூர் பகுதிகளில் விவசாயிகள் குறைந்தளவு தண்ணீர் தேவையான கம்பு, கேழ்வரகு போன்ற தானிய பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.
மூன்று மாத பயிரான கம்பு தானியத்திற்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு. நோய் தாக்குதலும் குறைவு என்பதால் ஒருசில விவசாயிகள் கம்பு சாகுபடியில் இறங்கியுள்ளனர். ஏக்கருக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை செலவு செய்து கம்பு பயிரிட்டுள்ளனர்.
மார்ச் மாத கடைசியில் கம்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது விளைச்சல் கண்டுள்ளது. வில்லியரேந்தல் விவசாயிகள் கூறியதாவது:
நெல் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் உர கடைகளில் இரண்டாம் நம்பர் கம்பு விதை வாங்கி ஒரு ஏக்கர் நடவு செய்துள்ளோம். மூன்று மாதத்தில் விளைச்சலுக்கு வந்து விடும்.
ஏக்கருக்கு ஐந்து மூடை வரை கிடைக்க வாய்ப்புண்டு. கடந்த நான்கு ஆண்டாக கோடையில் நெல் பயிரிடுவதை தவிர்த்து கம்பு பயிரிட்டு வருகிறோம்.
தற்போது கம்பு போன்ற தானிய வகைகளை பலரும் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இந்தாண்டு ஓரளவிற்கு விளைச்சல் கண்டுள்ளது.
காலை மற்றும் மாலையில் மட்டும் குருவி, கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த நேரத்தில் மட்டும் காவலுக்கு நாங்கள் குடும்பத்தினர் வந்து வயலில் காவலுக்கு நிற்போம், என்றனர்.