/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகைகளை வெட்டி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது
/
நகைகளை வெட்டி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது
ADDED : ஜூலை 04, 2024 02:34 AM

பிள்ளையார்பட்டி:வங்கியில் அடகு வைத்த நகைகளை வெட்டி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சில மாதங்களாக நகைக்கடன் வைத்த வாடிக்கையாளர்கள், கடனை செலுத்தி, நகையை திரும்ப பெற்றபோது நகை எடை குறைவதாகவும், நகையில் வெட்டி திருடப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
வங்கியிலும், வாடிக்கையாளர்களிடமும் வங்கி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 1,500க்கும் மேற்பட்ட நகைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 80 நகைகளில் நகை வெட்டப்பட்டது தெரிந்தது.
மொத்தம், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 167 கிராம் நகையை வெட்டி எடுத்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசில் கிளை மேலாளர் சரத்குமார் புகார் தெரிவித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நகைகளில் வெட்டி எடுத்து எடை குறைப்பு செய்து வாடிக்கையாளரை ஏமாற்றி, மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த திருப்புத்துார் தென்மாப்பட்டு நாராயணகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இவர், கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணி புரிகிறார். பிள்ளையார்பட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கியுள்ளார். அவர் வேலை செய்த மற்ற கிளைகளிலும், இதுபோல நடந்துள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.