ADDED : ஜூன் 01, 2024 04:37 AM
வெயிலின் தாக்கத்தால் முதியவர் பலி
காரைக்குடி: கலைமணி நகரைச் சேர்ந்தவர் இருதயராஜ் 70. இவர், தையல் இயந்திரம் மூலம் வீடு வீடாக சென்று துணிகளை தைத்து வந்தார். 100 அடி ரோடு அருகே உள்ள பாரதி நகர் 5வது வீதியில் தையல் இயந்திரத்தை கொண்டு சென்ற போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அழகப்பாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளியில் லேப்டாப் திருட்டு
மானாமதுரை: மேலப்பசலையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2லேப்டாப் மற்றும் ஜெராக்ஸ் பிரிண்டர், ஸ்பீக்கர் ஆகியவற்றை திருடர்கள் பள்ளி கதவை உடைத்து திருடியுள்ளனர்.பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்து பொருட்கள் திருடு போனது குறித்து மானாமதுரை போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி
சிவகங்கை: டி.புதுார் பிரேம் சிங் மகன் தீபேந்திரசிங் 32. இவர் இளந்தங்குடிபட்டியில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். மே 26 அன்று காலை 8:40 மணிக்கு சைக்கிளில் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் சென்றார். குண்டூரணி பாலம் அருகே சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி விசாரிக்கிறார்.
தற்கொலை
காளையார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஆய்க்குடி கருப்பையா 61. கால்நடைகள் வளர்த்து வருகிறார். மே 29 ம் தேதி காளையார்கோவில் அருகே கள்ளிவயல் பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார். அன்று மாலை 6:00 மணிக்கு அங்குள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதகுபட்டி: சிங்கம்புணரி அருகே சித்தலபட்டி சின்னையா மகன் தவசு 45. இவரது மனைவி சித்ரா 38. இவர்களுக்கு 11 வயதில் மகள், 9 வயதில் மகன் உள்ளனர். தவசு அடிக்கடி குடித்துவிட்டு வந்து, குடும்ப செலவிற்கு பணம் தரவில்லை. இதனால், கணவரை விட்டு பிரிந்து சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். மே 29ம் தேதி தனது மனைவியை வீட்டிற்கு அழைக்க வந்திருந்தார். அவர் வர சம்மதிக்கவில்லை. இந்த அதிருப்தியில் கொட்டகுடி பஸ் ஸ்டாப்பில் மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கிறார்.