ADDED : ஏப் 29, 2026 11:21 PM
காரைக்குடி, ஏப். 30 -
தேவகோட்டை ரஸ்தா ஸ்டேஷன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தப்படாமல் திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.
மத்திய அரசு உள்ளூர் கைவினைஞர்கள், சிறு உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் செயல்படுத்தப்பட்டது. மதுரை சுங்குடி சேலைகள், மணப்பாறை முருக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், காஞ்சிபுரத்தில் பட்டு போன்ற உள்ளூர் சிறப்பு பொருட்கள் அந்தந்த ரயில்வே ஸ்டேஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வரிசையில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷன்களில் செட்டிநாட்டின் சிறப்புமிக்க செட்டிநாடு ஸ்னாக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் செட்டிநாடு முறுக்கு, அதிரசம், தேன்குழல் உட்பட செட்டிநாட்டு ஸ்னாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
ரயில்களில் செல்லும் பயணிகள், அந்தந்த பகுதியில் உள்ள பொருட்களை இறங்கிச் சென்று வாங்க முடியாத நிலையில் இது போன்று திட்டத்தின் மூலம் பொருட்களை எளிதாக பெற முடியும். ஆனால், ரஸ்தாவில், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்ட பெட்டி பயன்பாடின்றி மூலையில் போடப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் திட்டமே கேள்விக்குறியாகி உள்ளதோடு பயணிகளும் ஏமாற்றம் அடையும் சூழல் நிலவுகிறது.
