ADDED : ஜூலை 04, 2026 07:53 PM
திருப்புத்துார்,ஜூலை5-
திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் உள்ள சேதமடைந்த ஆதி திராவிடர் மாணவர் விடுதி கட்டடத்தை அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தங்கி படிக்கும் வசதிக்காக சிங்கம்புணரி ரோடு, காளியம்மன் கோயில் ரோடு சந்திப்பில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக விடுதியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. மேலும் மாணவர் விடுதி கட்டடமும் முழுமையாக சேதமடைந்து விட்டது. மாணவர்கள் தங்காமல் சாப்பிட்டு சென்றனர். இந்நிலையில் இந்த மாணவர் விடுதி தற்போது மூடப்பட்டுள்ளது.
இதனால் சேதமடைந்த கட்டடத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. வாகனங்கள் அதிகமாக செல்லும் இணைப்பு ரோடு அருகே சேதமடைந்த கட்டடத்தால் விபத்து ஏற்படும் முன் முழுமையாக அகற்ற இப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனர்.
