/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அன்பு செலுத்த கற்றுத்தந்தது 'கொரோனா' காலம் மருத்துவ கல்வி இயக்குனர் ஜெ.சங்குமணி பேச்சு
/
அன்பு செலுத்த கற்றுத்தந்தது 'கொரோனா' காலம் மருத்துவ கல்வி இயக்குனர் ஜெ.சங்குமணி பேச்சு
அன்பு செலுத்த கற்றுத்தந்தது 'கொரோனா' காலம் மருத்துவ கல்வி இயக்குனர் ஜெ.சங்குமணி பேச்சு
அன்பு செலுத்த கற்றுத்தந்தது 'கொரோனா' காலம் மருத்துவ கல்வி இயக்குனர் ஜெ.சங்குமணி பேச்சு
ADDED : மே 10, 2024 05:01 AM

சிவகங்கை: 'அனைத்து உயிரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என கற்றத்தந்ததே கொரோனா காலம் தான்,' என காரைக்குடி அழகப்பா பல்கலை 40 வது ஆண்டு, அலுவலர் நாள் விழாக்களில் மருத்துவ கல்வி இயக்குனர் ஜெ.சங்குமணி பேசினார்.
விழாவிற்கு துணைவேந்தர் க.ரவி தலைமை வகித்தார். பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராமன், நிதி அலுவலர் வேதிராஜன் பங்கேற்றனர்.
விழாவில் ஜெ.சங்குமணி பேசியதாவது: நிர்வாகத்தில் அலுவலர்களை அனுசரித்து செல்வது முக்கியம். இந்திய அளவில் சிறப்பானது காரைக்குடி அழகப்பா பல்கலை. இக்கல்வி நகரை உருவாக்கியவர் அழகப்பர். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் கல்வி முடித்து செல்கின்றனர். இப்பல்கலை மூலம் பின்தங்கிய சிவகங்கையை கல்வி வளர்ச்சி நகராக உருவாக்கி வருகின்றனர்.
கொரோனா காலம் டாக்டர்களுக்கு சோதனை காலம். மதுரை அரசு மருத்துவமனையில் 18,500 கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்தேன்.
கொரோனா காலத்தில் நாங்கள் சிகிச்சை அளித்ததோடு, நோயாளிகளிடம் அன்பையும் செலுத்தினோம். அக்கால கட்டம் தான் அனைத்து உயிரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு மதுரை மீனாட்சி அம்மனிடம் கதறி அழுதேன். ஒவ்வொரு நொடியும் நாம் உயிருடன் இருப்பது கடவுளின் அனுக்கிரகம் தான். வாழ்க்கையை நேர்மறையாக எடுத்து செல்ல வேண்டும்.இவ்வாறு பேசினார்.
பல்கலை வளர்ச்சிக்கு ரூ. 120 கோடி
துணைவேந்தர் க.ரவி பேசியதாவது: இப்பல்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்தியுள்ளோம். தேசிய தர மதிப்பீட்டு குழுவிடம் தொடர்ந்து முதல் தரம் பெற்று வருகிறோம். இப்பல்கலையில் ரூ.10 கோடி செலவில் 'சிந்தெட்டிக்' விளையாட்டு தளம், ரூ.3 கோடியில் கட்டடம் கட்டப்பட உள்ளது. ஆகஸ்டில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் இப்பல்கலையை ஆய்வு செய்ய உள்ளனர். இம்முறையும் முதல் தரத்தை தக்க வைக்க வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி.,க்கு அடுத்து அதிக ஆராய்ச்சி படிப்புகள் அழகப்பா பல்கலையில் தான் நடக்கிறது. நம் ஆராய்ச்சி கட்டுரைகளை பிற நாடுகளில் மேற்கோள் காட்டி பேசுகின்றனர். சிங்கப்பூர் உதவியுடன் சென்னை தொழில் நிறுவனம் நம் பல்கலையில் தொழிற்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முன் வருகின்றனர். இப்பல்கலைக்கு அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.14 கோடி கிடைக்கிறது. இருப்பினும் பல்கலை வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.120 கோடி வரை செலவிடுகிறோம். இவ்வாறு பேசினார்.
சிறந்த அலுவலர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. தேர்வாணையர் ஜோதிபாசு நன்றி கூறினார்.