ADDED : செப் 30, 2024 04:52 AM

எஸ்.புதூர்: எஸ்.புதூர் ஒன்றியத்தில் தண்ணீரின்றி விளைச்சல் பாதிப்பால் கூலிக்கு கூட தேறாத கடலையை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இவ்வொன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆடிப்பட்டமாக விவசாயிகள் கடலை சாகுபடி செய்திருந்தனர்.
உரிய நேரங்களில் மழை பெய்யாததால் கடலையின் அளவு சிறுத்தும், விளைச்சல் இன்றியும் காணப்பட்டது.
வழக்கமாக 120 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய கடலை, மழை இல்லாததால் 150 நாட்களை கடந்தும் பிடுங்காமல் விடப்பட்டிருந்தது. இதற்கு மேல் விட்டால் உள்ளதும் போய்விடும் என்பதால் இவ்வொன்றிய விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவைவிட மிகவும் குறைவாகவே விளைச்சல் கிடைத்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் அளவில் கால்வாசி அளவிற்கு தான் கடலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கிடைத்த கடலையைக் கொண்டு தொழிலாளர்களுக்கு கூலியை கூட கொடுக்க முடியாத நிலையில் இவ்வொன்றிய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.