ADDED : ஜன 08, 2024 06:14 AM
பூவந்தி, : பூவந்தி அருகே திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2002-2003ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் நேற்று மீண்டும் பள்ளி வளாகத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
திருமாஞ்சோலை அரசு பள்ளியில் திருமாஞ்சோலை, அரசனூர், ஏனாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு 2002-- 2003ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த 47 மாணவர்கள் 20 ஆண்டிற்கு பின் பள்ளியில் சந்திக்கவேண்டும் என முடிவு செய்தனர்.
இவர்களுக்கு முன்னாள் மாணவர் பாஸ்கரன் ஏற்பாடுகளை செய்தார். நேற்று முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தனர். வகுப்பறைகளில் அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.
முன்னாள் மாணவி பேச்சியம்மாள் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், அவசர கால யுகத்தில்இது போன்ற பள்ளி பருவ நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.