ADDED : ஜன 30, 2024 01:49 AM
திருப்புத்துார் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு சிவகங்கை பா.ஜ.வினர் மாவட்டத்தில் மத்திய அரசின் பயனாளிகளை கணக்கெடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட பா.ஜ.வினர் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஆண்டுகளில் பா.ஜ., தலைவர் நட்டா, மாநில தலைவர்அண்ணாமலை, மத்தியஅமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் கட்சியினரைசந்தித்து உற்சாகப்படுத்தினர். தொகுதிக்கு பொறுப்பு அமைச்சர் என்பதால் வி.கே.சிங் 4 முறை வந்துள்ளார்.
தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தொகுதி பார்வையாளராகஅர்ஜூன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் முகாமிட்டுள்ள இவர், கிளை,ஒன்றிய, மையங்கள் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
மாவட்டத்திலுள்ள 1679 ஓட்டுச்சாவடிகளிலும் பா.ஜ.வினர் மத்திய அரசின் 74 திட்டங்களின் பயனாளிகளை கணக்கெடுக்கத் துவங்கியுள்ளனர். இதுவரை 30 சதவீதபணியை நிறைவேற்றியுள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். குறைந்தது ஓட்டுச்சாவடிக்கு 400 பயனாளிகளை கண்டறிய முயல்கின்றனர்.
கிளை பொறுப்பாளர்கள், சக்தி கேந்திராவின் அமைப்பாளர்கள் என்று பலர் இப்பணியில் உள்ளனர். தேர்தலின் போது இந்த பயனாளிகளிடம் பிரசாரம் செய்வதை இலக்காக கொண்டுள்ளனர்.