ADDED : மார் 07, 2026 07:32 AM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கரை அமைப்பதற்கு விதிகளை மீறி ஆற்று மண்ணை பயன்படுத்தி இரவில் பணி மேற்கொள்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்படுகையில் பழையனுார், கானுார் கண்மாய்களின் பாசன தேவைக்காக அணைக்கட்டு 40 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 2024ல் பணிகள் தொடங்கப்பட்டு கடந்தாண்டு பணி நிறை வடைந்தன.
அணைக்கட்டில் நீர் வரத்திற்காகவும், தண்ணீர் தேக்கவும், அணையில் பராமரிப்பு பணிக்காகவும் அணைக்கட்டின் முன்பும், பின்பும் ஆற்றின் மட்டத்தில் இருந்து அணை உயரத்திற்கு ஏற்ப 2 முதல் மூன்று மீட்டர் உயரம் வரை கரை அமைக்க வேண்டும்.
கரைகள் அமைக்க செம்மண், கிராவல்மண் எடுத்து வந்து கரை புதிதாக அமைக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தகாரர் வைகை ஆற்றினுள் இருந்தே மண் அள்ளி கரை அமைத்து வந்தனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை யடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வைகை ஆற்றினுள் ஒப்பந்தகாரர் இயந் திரம் மூலம் ஆற்றில் உள்ள மண்ணை அள்ளி கரை அமைத்து வருகிறார்.
நீர் நிலைகளை ஒட்டிய கரைகளில் பொதுப் பணித்துறை மற்றும் விவசாயிகள் ஜீப், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும். ஆனால் ஆற்றில் இருந்தே மண் அள்ளி கரை அமைப்பதால் கரை எளிதில் கரைந்து போகும் அபாயம் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ஒப்பந்தகாரர்கள் வைகை ஆற்றினுள் இயந்திரத்தை பயன்படுத்தி மண்ணை அள்ளி கரை அமைத்து வருகின்றனர். மழை காலங்களில் மண் கரைந்து விடும், நீர்வரத்து காலங்களில் அரிப்பு ஏற்பட்டு அணைக்கட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும், என்றனர்.

