ADDED : அக் 06, 2025 01:17 AM

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வார சந்தையில் மழையால் இலவம் பஞ்சு மரம் விழுந்ததில், ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டணத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி லட்சுமி, 56, என்பவர் பலியானார்.
நேற்று மதியம் இப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வாரச்சந்தைக்குள் இருந்த இலவம் பஞ்சு மரம் ஒன்று வேருடன் சாய்ந்து, தகர கூரையில் விழுந்தது. அங்கு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டணத்தைச் சேர்ந்த லட்சுமி மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மரம் விழுந்த இடிபாடுகளில் சிக்கி காய்கறிகள் வாங்க வந்த வெங்களூர் பாண்டிமீனாள், 56, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கார்த்தியாயினி, 26, தொண்டியை சேர்ந்த தொண்டியம்மாள், 45, தேவகோட்டை ஆத்மநாதன், 42, காரைக்குடி ஹரிஹரசுதன் ஆகியோர் பலத்த காயமுற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
