
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாத்திமா நாச்சியார் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
தமிழகத்தில் சில இடங்களில் மொகரம் பண்டிகைக்காக ஹிந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. இவ்வொன்றியத்தில் வாராப்பூரில் ஜமீன்தார் காலத்தில் இத்திருவிழா உருவானது.
பத்து நாட்கள் நடத்தப்படும் இத்திருவிழாவின் கடைசி நாளான ஜூலை 7ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பூக்குழி திருவிழா நடந்தது. ஆண்களும், பெண்களும் நேர்த்திக்கடனுக்கு தீ மிதித்தனர்.
இதைத் தொடர்ந்து பெண்கள் பூக்குழி முன் தலையில் முக்காடு அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் தலையின் மேல் மூன்று முறை நெருப்பை அள்ளிப்போடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அசனா, உசனாவுடன் பாத்திமா நாச்சியார் தேர் பவனி வந்தார். விழாவில் ஏராளமான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பங்கேற்றனர்.