ADDED : ஏப் 13, 2026 05:16 PM

காரைக்குடி:காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறாததால் பின்தங்கி இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் அதிக வீடுகள் உள்ள பகுதியாக கணேசபுரம் செஞ்சை, காளவாய் பொட்டல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. கணேசபுரத்தில் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஆனால் சாலை, கால்வாய், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் என அடிப்படை வசதிகள் தங்களுக்கு முழுமையாக கிடைக்காததோடு, வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ராஜா கூறுகையில்,
காரைக்குடி மாநகராட்சியில் அதிக வீடுகள் மற்றும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக கணேசபுரம், சந்தைப்பேட்டை பகுதி உள்ளது. இப்பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழல் நிலவி வருகிறது. முக்கிய சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது. பல தெருக்களில் சாலை வசதி இல்லை. சாக்கடை கால்வாய் முறையாக பராமரிப்பது இல்லை. திங்கள் கிழமை சந்தைக்கு காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை. சந்தையில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டது. ஓராண்டாகியும் கட்டடம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அரசின் நிதி வீணாவதோடு கட்டடமும் பாழாகி வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து வசதியில்லாததால் மக்கள் பல கி.மீ., நடந்து சென்று பஸ் ஸ்டாப் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கார்த்திகேயன் கூறுகையில்,
இப்பகுதியில் இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் பூங்கா அமைப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆங்காங்கே குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. முக்கியசாலை சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
