ADDED : ஏப் 03, 2026 05:43 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தென்னை மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, அணைக்கரைப்பட்டி, பிரான்மலை, ஒடுவன்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்துள்ளனர். சில ஆண்டுகளாக இம்மரங்களில் வெள்ளை ஈக்கள் என்ற பூச்சிகளின் தாக்குதலால் விளைச்சல் பாதித்து வருகிறது. தென்னை ஓலைகளில் அமர்ந்து அதன் பச்சையத்தை அழிக்கும் பூச்சிகளால், மட்டைகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை குறைந்து காய்ந்து விடுகிறது.
ஒரு மரத்திற்கு மூன்றில் ஒரு பங்கு மட்டைகள் காய்ந்து விடுவதால் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது மழை இல்லாத நிலையில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அனைத்து மட்டைகளும் காய்ந்து, மரத்தின் காய்க்கும் திறன் குறையவும், மரமே பட்டுப்போகவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் தெரிவித்ததாவது: தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்தாண்டு பாதிப்பு கடுமையாக உள்ளது. ஈக்களை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. வேகமாக அனைத்து மரங்களுக்கும் பரவி வருவதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
