UPDATED : ஜூலை 07, 2026 05:44 PM
ADDED : ஜூலை 07, 2026 05:02 PM

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கோழிக்குடிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லாமல் கிராமத்தினர் தவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க 2021 ஆம் ஆண்டு பழைய குடிநீர்தொட்டி இடிக்கப்பட்டு புதிய தொட்டி கட்டப்பட்டது. ஆனால் முறையாக பைப் லைன் பொருத்தாததால் இன்று வரை தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த மூன்று சிறிய தொட்டிகளில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதன் போர்வெல்லில் இருந்து நேரடியாக மோட்டார் மூலம் ஒரு சில வீடுகளுக்கு மட்டும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரையே விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் இங்குள்ள தெருவிளக்கு 10 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே எரிவதாகவும் மற்ற நாட்களில் காற்று, மழை உள்ளிட்ட காரணங்களால் பழுதாகி விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குமார், விவசாயி; எங்கள் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக முறையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. மோட்டார் மூலம் ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே தண்ணீரை விநியோகிக்கிறார்கள். மற்ற வீடுகளுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை. புதிதாக கட்டப்பட்ட தொட்டி பூட்டி கிடக்கிறது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளது. தெருவிளக்கு குடிநீர் தொட்டிகளுக்கான மின்சார பெட்டிகள் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கின்றன. பலமுறை வலியுறுத்தியும் யாரும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விரைந்து அடிப்படை வசதிகளை சீரமைத்து தர வேண்டும் என்றார்.
