ADDED : ஜூலை 23, 2026 11:19 PM
சிவகங்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயது கடந்த மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்.,ல் துவங்க உள்ளது. முதற்கட்டமாக ஆக., 1 முதல் வீடுகள் மற்றும் அதிலுள்ள பொருட்கள் பற்றிய கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பணியில் இருந்து 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சையில் உள்ளோர், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.
இதுகுறித்து அந்த சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:
எங்களின் கோரிக்கையை ஏற்று பொது நிர்வாகத்துறை துணை செயலாளர் ரவி, மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ள ஆசிரியர்கள், 10 மற்றும் பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்றனர்.
