
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது புளியால்,வாரியன்வயல், நெம்மேனி. இதில் புளியாலில் இருந்து கிளியூர் வழியாக முப்பையூருக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. டூவீலர் கூட செல்ல முடியவில்லை.
புளியால், மற்றும் வடக்கு புற கிராம மக்கள் புளியால் கிளியூர் ரோடு வழியாகத்தான் தொண்டி மதுரை ரோட்டில் உள்ள முப்பையூர் சென்று அங்கிருந்து சருகணி, சிவகங்கை செல்கின்றனர். இதன் மூலம் 25 கி.மீ. துாரம் பயணம் குறையும்.
இல்லையேல் தேவகோட்டை வந்து தான் மதுரை செல்ல வேண்டும். இந்த நிலையில் கிளியூர் ரோடு நாளுக்கு நாள் சேதமாகி வருகிறது.
இங்கு தெரு விளக்குகளும் எரியாததால் கிளியூர் விலக்கில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை. இங்கு ரோடு அமைக்க நிதி வந்தும் ஏதோ காரணத்தால் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூறுகின்றனர்.
இதேபோல் வாரியன்வயல் ரோடும் மிகவும் மோசமடைந்துள்ளது. புளியால், அதங்குடி, பகையனி, திடக்கோட்டை பகுதி பெண்கள் மொன்னியில் உள்ள தலைமை சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டும். ரோடு சரியில்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஆனந்த் கூறியதாவது: புளியால் முப்பையூர் இணைப்பு சாலையான கிளியூர் ரோடு சரிசெய்ய கோரிக்கை வைத்தோம். இங்கு ரோடு அமைக்காமல் வேறு ரோட்டை அரை குறையாக போட்டுள்ளனர்.
தற்போது நகருக்குள் இருக்கும் பகுதியில் மக்களே ரோட்டில் மண்ணை போட்டு உள்ளனர். இதே போல அதங்குடி விலக்கு வாரியன்வயல் ரோடு 20 ஆண்டுகளுக்கு முன்பு போட்டது.
டூவீலரில் கூட செல்ல முடியவில்லை. மொன்னி மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது.
ஊராட்சிகளில் ரோடு போடுவதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் அனைத்து ரோடுகளையும் பார்வையிட்டு தேவைக்கேற்றப புதிய ரோடுகளை போட வேண்டும் என்றார்.

