ADDED : ஜன 19, 2025 05:02 AM
திருப்புவனம்: பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு ஒளிரும் குச்சி, பட்டை, ஒளிரும் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை பாதுகாப்பிற்கு வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தை மாதம் பழநி மலை முருகனை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். பக்தர்கள் நடந்து செல்ல தனி பாதை இருந்தும் முறையாக பராமரிப்பு இல்லை. பரமக்குடி, ராமநாதபுரம், ,இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டியே நடந்து செல்கின்றனர். பாதயாத்திரை பக்தர்கள் பெரும்பாலும் பகலில் ஓய்வு எடுத்து விட்டு அதிகாலை 4:00 மணி முதல் 11:00 மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடப்பது வழக்கம்.
தற்போது வெம்பா எனப்படும் பனிப்பொழிவு பல இடங்களில் காணப்படுகிறது. வழக்கமான பனியாக இல்லாமல் அடர்த்தியான பனியாக காணப்படுகிறது. வெகு அருகில் வந்தால் மட்டுமே ஆட்கள் நடமாட்டம் தெரியும். பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து போலீசார் பக்தர்களின் சுமைகளில் ஒளிரும் பட்டைகளை ஒட்டுவது வழக்கம், மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட்களும் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு போலீசார் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பிற்கு இதுவரை வழங்கவில்லை. இதனால் விபத்து நேரிட வாய்ப்புண்டு, எனவே நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.