ADDED : ஜன 11, 2025 06:24 AM
சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
மானாமதுரை: மானாமதுரை அருகே கே.புதுக்குளம் காந்தி மகன் பாண்டியராஜா 27. இவருக்கு, அவரது தந்தை காந்தி 47, தாய் கண்ணாத்தாள் 43, உறவினர் திருச்சுழி நாகராஜ் 45, அவரது மனைவி பஞ்சு 42 ஆகியோர் 2024 ம் ஆண்டு ஜூலை 7 ம் தேதி 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அத்திருமணம் மூலம் சிறுமியை, பாண்டியராஜா பாலியல்ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மானாமதுரை சமூக நல அலுவலர் அம்சவள்ளி புகாரின்பேரில், மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி, போக்சோ மற்றும் கட்டாய திருமண சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.
எஸ்.ஐ.,யை மிரட்டியவர் கைது
காரைக்குடி: காரைக்குடி வடக்கு ஸ்டேஷன் எஸ்.ஐ., மலைச்சாமி. இவர் ஜன.,9 ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டார். சந்தைபேட்டை அருகே அங்கு வந்த முத்துராமலிங்கதேவர் நகர் குமரவேல் மகன் பாக்கியரஞ்சித் 25, வாளை காண்பித்து எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்துள்ளார். இவர் மீது காரைக்குடி, ஒட்டன்சத்திரம் உட்பட ஸ்டேஷன்களில் 16 வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், அவரை கைது செய்தார்.
மண் கடத்திய லாரி பறிமுதல்
மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியரேந்தல்கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் எஸ்.ஐ., ராஜதுரை மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது போலீசாரை பார்த்தவுடன் மண் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் வாகனங்களை போட்டுவிட்டு தப்பினர்.போலீசார் 2 டிப்பர் லாரிகளையும்,ஒரு மண் அள்ளும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து தப்பிய செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன்35, செய்யாலூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் 29, மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.
இளம்பெண் தற்கொலை
கல்லல்: கல்லல் அருகே நடராஜபுரத்தில் உள்ள பாகனேரி ரோட்டை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகள் ரம்யா 18. இவர் ஜன., 9 ம் தேதி இரவு 8:45 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லல் இன்ஸ்பெக்டர் வாசிவம் விசாரிக்கிறார்.

