UPDATED : ஆக 06, 2026 05:57 PM
ADDED : ஆக 06, 2026 05:22 PM
சிவகங்கை:சிவகங்கை தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்காததால் கிராமங்களில் சந்தேக பார்வையுடன் மக்கள் அணுகுவதால் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய டிஜிடல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முற்கட்ட பணிகள் ஆக.1 முதல் 30 வரை நடைபெறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்த உள்ளனர். பணியாளர்கள் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்தபணியில் ஈடுபட உள்ளனர். ஒரு மேற்பார்வையாளர் தலைமையில் 6 முதல் 8 கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்க உள்ளனர்.
இந்த பணியில் அதிகமாக ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வரும் பணியாளர்களுக்கு சிவகங்கை தாலுகாவில் முறையாக ஆர்டர் இன்னும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான மேற்பார்வையாளர்களுக்கு அவர்களது வாட்ஸ் அப்பில்தான் ஆர்டர் அனுப்பப்பட்டுள்ளது. சிவகங்கை தாலுகாவில் மட்டும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இன்னும் ஐ.டி.,கார்டு வழங்கப்படவில்லை என புகார் உள்ளது. மக்கள் தொகை பணி தொடங்கி 6 நாட்கள் ஆகியும் இன்னும் ஐ.டி.,கார்டு வழங்காததால் சில கிராமங்களில் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க பொதுமக்கள் மறுப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே சிவகங்கை தாலுகாவில் மக்கள் தொகை பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் அனைவருக்கு ஐ.டி.,கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
