திருப்புத்துாரில் மழை குறைகிறது:குறைவால் பாசன பரப்பளவு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு மனைகளாகிறது
திருப்புத்துாரில் மழை குறைகிறது:குறைவால் பாசன பரப்பளவு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு மனைகளாகிறது
ADDED : ஏப் 14, 2026 03:30 PM
திருப்புத்துார்:திருப்புத்துாரில் தொடர்ந்து நிலவும் பாசனப் பற்றாக்குறையால் நெல்சாகுபடி குறைவதும், வயல்கள், தோட்டங்கள் மனைகளாக பிரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. மீதமுள்ள இடங்களிலும் வேலிக்கருவை மரங்கள் வளர்ப்பே நடைபெறுகிறது. பாசன வசதியை அதிகரிக்கும் திட்டங்களை வாக்குறுதிகளாக வேட்பாளர்கள் பேச வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பற்றாக்குறை பாசனம்:
திருப்புத்துாரில் பாலாறு,மணிமுத்தாறு,விருசுழியாறு கடந்து செல்கின்றன. சில ஆண்டுகளாக மணிமுத்தாற்றில் மட்டுமே நீர்வரத்து காணப்படுகிறது. மற்ற இரு ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக பாலாற்றில் திருப்புத்துாரைக் கடந்து நீர் செல்வதில்லை. இந்த ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு ஆற்றில் நீர் வரத்து தடுக்கப்படுகிறது. நீர்வரத்தை சரி செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்த ஆற்றில் நீர்வரத்து திருப்புத்துாரை எட்டி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அதே போல மழைப்பொழிவும் ஆண்டு சராசரியைக் கடந்தாலும் தேவையான நேரத்தில் பெய்வதில்லை. மேலும் கிராமங்களில் பரவலாகவும் பெய்வதில்லை. இதனால் விவசாயப்பணிகளை உரிய நேரத்தில் செய்ய முடியவில்லை. குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தால், அதிகரித்துள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு தேவையான அளவில் நீர் கிடைப்பதில்லை. இதனால் பாசனத்திற்கான போதிய நீர் இன்றி விவசாயிகள் தவிக்கின்றனர்.
குறையும் சாகுபடி பரப்பு
திருப்புத்துார் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல்சாகுபடி இருந்தது. தற்போது சிறிது,சிறிதாக சுருங்கி 5 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இது போலவே நன் செய் மானாவாரி பயிர்கள் சாகுபடியும் 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்து விட்டன. தோட்டப்பயிர்கள் 80 சதவீதம் அழிந்து விட்டன. இதனால் வயல்கள், தோட்டங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்து விட்டன. பல வயல்களில் தற்போது சீமைக்கருவை மரங்கள் வளர்த்து விற்பனை செய்வதும் ஒரு தொழிலாக மாறி வருகிறது.
பலனளிக்காத பாசன திட்டங்கள்
திருப்புத்துாரில் வறட்சி மற்றும் பாசனப் பற்றாக்குறையை போக்க 1980-களில் பெரியாறு பாசன மேம்பாடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் திருப்புத்துார் ஒன்றிய கண்மாய்கள் சேர்க்கப்படவில்லை. 1994ல் பெரியாறு திட்ட ஏழாவது பாசன கால்வாயிலிருந்து விஸ்தரிப்பு கால்வாயாக கருப்பூர்,கோட்டையிருப்பு,ரணசிங்கபுரம் கண்மாய்களுடன் திருப்புத்தூர் பெரியகண்மாய் வரை கால்வாய் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த கால்வாயும் அத்திட்டத்தில் முறையாக இணைக்கபடவில்லை. இதனால் ஆயிரம் ஏக்கர் அளவில் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால்வாயில் சில ஆண்டுகள் மட்டுமே நீர் வரத்து காணப்பட்டது. தற்போது நீர் வரத்தின்றி அந்த கால்வாய் சிதிலமடைந்து ரூ 22 கோடி மதிப்பிலான திட்டம் மண்ணோடு மண்ணாகி விட்டது. அது போல 7 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் திருப்புத்தூர் பகுதி இணைத்து திட்டம் தயாரானது. .பின்னர் திருத்திய திட்டத்தில் திருப்புத்தூர் பகுதி விடுதலாகி விட்டது.
புறக்கணிக்கப்படும் கண்மாய் பராமரிப்பு
திருப்புத்துார் கண்மாய்களில் கலுங்கு,மதகு, மடை பராமரிப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை. சில் கண்மாய்களில் மட்டுமே பணி நடந்துள்ளது. பெரும்பாலும் மண் வேலைகள் மட்டுமே செய்யப்பட்டு முழுமையாக நீர் சேமிக்க முடியாமல் கண்மாய்கள் உள்ளன. நீர்வரத்துக் கால்வாய்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி நீர்வரத்தும் கேள்விக்குறியாகவே பல கண்மாய்கள் பெருகுவதே இல்லை.
பாசன வசதி அதிகரிக்கப்படுமா
திருப்புத்துார் பகுதியில் முன்பிருந்த செங்கல் காளவாய், நெசவு, தென்னங்கீற்று முடைதல் போன்ற தொழில்கள் நசிந்து விட்டன. நெல்சாகுபடி உள்ளிட்ட விவசாயப் பணிகள் மேலும் நசிவடையும் முன அரசு பாசன வசதியை அதிகரிக்கவும், இருக்கும் பாசன நீரை உறுதிபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்துக் கண்மாய்களிலும் பழுதடைந்துள்ள மடைகளை புதுப்பிக்கவும், வரத்துக்கால்வாய்களை நவீனப்படுத்தவும்,கொள்ளளவை அதிகரிக்க தூர்வாரவும், பெய்யும் மழை நீரைமுழுமையாக சேமிக்கவும் கோரியுள்ளனர்.
புதிய திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பில் திருமயம் பகுதியிலிருந்து வரும் கால்வாயிலிருந்து திருப்புத்தூருக்கு பிரிவு வாய்க்கால் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தவும், திருப்புத்தூரை பெரியாறு கால்வாய் திட்டத்தில் இணைக்கவும், பெரியாறு அணையில் 146 அடிக்கு மேல் வரும் உபரிநீரை சிவகங்கை மாவட்டத்திற்கு திருப்பவும் நடவடிக்கை தேவை. இதற்கான நடவடிக்கை எடுக்க வேட்பாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
