/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 06:28 AM
திருப்புவனத்தை சுற்றிலும் உள்ள திருப்பாச்சேத்தி, பழையனூர், கண்ணாரிருப்பு, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மதுரைக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 2 முல் 5 முறை சென்று வர வேண்டிய இந்த பஸ்களை நம்பி ஏராளமான கிராமத்தினர் மதுரை சென்று வருகின்றனர். மதுரை மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் உள்ள ஜவுளி கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள், நகை கடைகள் என பல்வேறு கடைகளில் திருப்புவனம் மக்கள் பணிபுரிகின்றனர்.
காலை எட்டு மணிக்கு பணிக்கு செல்லும் இவர்கள் இரவு எட்டு மணிக்கு மேல் கிராமங்களுக்கு செல்லும் கடைசி பஸ்களை நம்பியே உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இரவில் கிராமப்புறங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து வரும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு 7:25 மணிக்கு மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பாச்சேத்திக்கு டவுன் பஸ் கிளம்பியுள்ளது. இந்த பஸ்சில் 50 பேர் இருந்தனர்.
திருப்புவனம் வரும் போது பஸ்சில் டீசல் இல்லை என கூறி அனைவரையும் போலீஸ் சோதனை சாவடி அருகே இறக்கிவிட்டு, மடப்புரம் பணிமனைக்கு சென்று விட்டனர்.
அந்த பஸ்சில் வந்த பெண்கள் வேறு பஸ்சுக்காக இரவு 10:00 மணி வரை காத்து கிடந்தனர்.
பெண் பயணிகள் கூறுகையில்: பஸ் பழுதானால் அடுத்த பஸ்சில் பயணம் செய்ய வசதியாக டிக்கெட்டில் கண்டக்டர் எழுதி கொடுப்பது வழக்கம். இலவசமாக பயணம் செய்வதால் அடுத்த பஸ்சில் ஏறி போங்கள் என கூறி விட்டனர்.
ஆண் பயணிகள் இருவர் மட்டுமே இருந்ததால் அவர்களுக்கு திருப்புவனம் வரை உள்ள பயணக்கட்டணத்தை மட்டும் எடுத்து கொண்டு மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். அடிக்கடி திருப்புவனத்துடன் பஸ்சை நிறுத்தி விடுகின்றனர்.
ஹெட் லைட் எரிய வில்லை, டீசல் இல்லை, பிரேக் பிடிக்கவில்லை என பல காரணங்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் கட்டண பேருந்துகளையாவது இயக்க வேண்டும், என்றனர்.