/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கயிறு தயாரிப்பு பணி மும்முரம்
/
திருப்புவனத்தில் கயிறு தயாரிப்பு பணி மும்முரம்
ADDED : ஜன 08, 2024 06:06 AM

கீழடி, : கீழடி அருகே சயனாபுரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கான கயிறு தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் திருநாளன்று விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து மாலை சூடி, புது துண்டு வேட்டி அணிவித்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், அன்றைய தினம் பசுமாடு, எருமை மாடு, ஜல்லிகட்டு காளை உள்ளிட்டவற்றிற்கு மூக்கணாங்கயிறு, பிடி கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்டவை மாற்றுவது வழக்கம்.
கீழடி அருகே சொட்டதட்டி, சயனாபுரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் 200 பேர் முதல் 300 பேர் வரை கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தயாரிக்கும் கயிறு விற்பனைக்கு பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மதுரையில் இருந்து நுாலை மொத்தமாக வாங்கி வந்து தொழிலாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் உள்ளிட்ட மாதங்களில் மாடுகளுக்கான கயிறு தயாரிப்பு நடைபெறும். மற்ற நாட்களில் குழந்தைகளுக்கான தொட்டில் கயிறு, திருமாங்கல்ய கயிறு, கன்று குட்டிகளுக்கு முகத்தில் மாட்டப்படும் கூடு கயிறு என பல்வேறு கயிறு தயாரிக்கப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 4 தொழிலாளர்கள் கொண்ட குழுவாக இணைந்து கயிறு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிற கயிறுகள் தயாரித்தாலும் வெள்ளை நிற கயிறுகள் அதிகமாக தயாரிக்கின்றனர்.