/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாமியார்பட்டி பள்ளி கட்டடம் சேதம்; மாணவர்கள் அவதி
/
சாமியார்பட்டி பள்ளி கட்டடம் சேதம்; மாணவர்கள் அவதி
ADDED : ஜன 30, 2024 01:47 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே சாமியார்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தரைத்தளம் பெயர்ந்துள்ளதால், மாணவர்கள் சிரமப்படுவதாக கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி சாமியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 16 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் ஒரே கட்டடத்தின் கீழ் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அறை, மாணவர்கள் வகுப்பறை செயல்படுகிறது. இந்த கட்டடமும் சிதிலமடைந்து போனதால், இவற்றை புதுப்பிக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர்.
கடந்த 2021-2022ம் ஆண்டு திட்ட நிதி ரூ.64 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் பள்ளி கட்டடங்களை சீரமைத்தனர். குறிப்பாக மாணவர்கள் அமரும் தரைதளம் தரமின்றி அமைக்கப்பட்டதால் காலப்போக்கில் பள்ளி கட்டடம் சிதிலமடைந்து விட்டது.
குறிப்பாக தரைத்தளத்தில் இருந்த சிமென்ட் தரை பெயர்ந்துவிட்டதால், துாசி பறந்து மாணவர்களுக்கு மூச்சு திணறல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
எனவே சாமியார்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தரைத்தளத்தை தரமான முறையில் கட்டித்தர வேண்டும் என கிராமத்தினர் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
தரமற்ற பள்ளிசீரமைப்பு பணி
சாமியார்பட்டி கே.பிரவீன்குமார் கூறியதாவது:
2022ம் ஆண்டு இப்பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணி செய்யப்பட்டது.இது குறித்து ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்தும், தரமான பணி நடக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது இப்பள்ளி கட்டட தரைத்தளம் பெயர்ந்து, சிமென்ட் துாசி பறப்பதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இக்கட்டடத்தை புதுப்பித்து தருமாறு கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம், என்றார்.