UPDATED : ஜூலை 21, 2026 04:55 PM
ADDED : ஜூலை 21, 2026 04:41 PM

காரைக்குடி:கல்லல் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கல்லல் ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு போர்வெல் மூலமும், காவிரி கூட்டு குழு நீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல மாதங்களாக இந்திரா நகர் , சித்திக் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கவில்லை. மாதத்திற்கு 2 நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் சூழல் நிலவுகிறது இதனை கண்டித்து இ.கம்யூ., தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பொதுமக்கள் கூறுகையில்;
2 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி சேதமடைந்ததால் அதனை இடித்து விட்டனர். ஆனால் புதிதாக அதே கொள்ளளவு தொட்டி கட்டவில்லை. முறையாக குடிநீர் வரி, வீட்டு வரி கட்டி வருகிறோம். ஆனால் மாதத்திற்கு 2 நாள் மட்டுமே தண்ணீர் வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சித்திக் நகரில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
