/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புழுதி பறக்கும் ரோடு: கழிவு நீர் சங்கமம்
/
புழுதி பறக்கும் ரோடு: கழிவு நீர் சங்கமம்
ADDED : செப் 03, 2011 12:35 AM
காரைக்குடிக்கு அருகே உள்ளது அமராவதிபுதூர் ஊராட்சி.
மீனாவயல், அண்ணாநகர், சமத்துவபுரம், காந்திநகர், கணபதிபுரம், நடராஜநகர், ராஜேஸ்வரி நகர், தேவகோட்டை ரோடு, பெரியார்நகர், மருதுபாண்டியர் தெரு, மாரியம்மன்கோயில் தெரு, சிவன்கோயில் வடக்கு தெரு, மேலக்குடியிருப்பு, நடுக்குடியிருப்பு, வ.உ.சி., தெரு உள்ளன. மூன்று வார்டுகளில் 5,000 பேர் வசிக்கின்றனர். தினமும் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். தலைவராக எஸ்.செங்கொடியாள், துணை தலைவராக பெரி.ராமசாமி மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
பிரச்னை என்ன?: இங்கு முக்கிய பிரச்னையாக ரோடு, குடிநீர் பிரச்னை உள்ளது. மீனாவயல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் இன்றி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடுக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு பகுதிகளில் தார் வாடையே காணாத ரோடுகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகள் தூர்ந்து காணப்படுகின்றன. குப்பை தொட்டி இல்லாததால் வீட்டு கழிவுகள் தெருமுனைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு உள்ளது. அமராவதிபுதூர் மெயின் ரோட்டில் வீடுகள், காம்ப்ளக்ஸ் கடைகள் அதிகளவு உள்ளன. வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. பராமரிப்பு இன்றி, வாய்க்காலில் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.புதூர் கண்மாய், உய்யக்கொண்டான் கண்மாய், கங்கையடியேந்தல் என 5 பாசன கண்மாய்கள் உள்ளன. எம்.பி., நிதியில் தூர்வாரப்பட்ட கண்மாய்கள், பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. கண்மாய் கழுங்குகள் சேதமடைந்து மழை நீர் தேக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான தெருக்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த 2001-02ம் ஆண்டு எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயனற்று கிடப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. காரைக்குடி- தேவகோட்டை ரோட்டை ஒட்டிய அமராவதிபுதூரில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்லாததால் மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இப்பகுதி மக்கள் கூறுவதென்னஜி.உமாமகேஸ்வரி, குடும்ப தலைவி: அண்ணாநகரில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் கடத்தப்படுகிறது. குடிநீருக்காக போடப்பட்ட இரண்டு 'போர்வெல்' நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ளது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ஊரணிகள் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காக மாறிவருகிறது.ஆர்.வான்மதி, சமூக ஆர்வலர்: பெரியார்நகர் - அண்ணாநகர் இடையே ரோடு போடும் பணி நடந்தது. நிதி பற்றாக்குறையால் மெட்டல் ரோடாக காட்சியளிக்கிறது. தேவகோட்டை மெயின் ரோட்டை ஒட்டியுள்ள அமராவதிபுதூரில் பஸ் ஸ்டாப் இருந்தும் இந்த வழியாக செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். கரு.கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர்: தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட்டை ஒட்டி மெயின் ரோட்டில் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. இதனருகே, பள்ளிக்கூடம், கோயில், குடியிருப்பு பகுதிகள் அமைந்திருப்பதால் மாணவர்கள், பெண்கள் தினமும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லை. அமராவதிபுதூர் ஊராட்சிக்கென வி.ஏ.ஓ., இல்லாததால், கல்லுப்பட்டி வி.ஏ.ஓ., கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதனால் இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.