ADDED : ஜன 30, 2025 09:50 PM
திருப்புவனம்; திருப்புவனம் வட்டாரத்தில் நெல் அறுவடை செய்த வயல்களில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய வேளாண் துறை சார்பாக மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு பத்தாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பரில் நெல் நடவு பணிகள் தொடங்கும், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் நடவு பணிகளும் தாமதமாக நடந்தது.
ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை தொடங்கி பிப்ரவரியில் அறுவடை நிறைவடையும். அதற்கு ஏற்ப நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் கேழ்வரகு, நிலக்கடலை, எள் உள்ளிட்டவை சாகுபடி செய்யலாம், குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.
இதற்காக வேளாண் துறை சார்பில் 50 சதவிகித மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வேளாண் அலுவலகத்தில் கேழ்வரகு 470 கிலோ, நிலக்கடலை ஆயிரத்து 470, எள் 70 கிலோ இருப்பு உள்ளதாகவும் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்று கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.