
திருப்புத்துார் தாலுகா நிலத்தடிநீர் அதிகம் இல்லாத பகுதி. வானம் பார்த்த பூமி. இங்கு பாசனத்திற்கு மட்டும் அல்ல, குடிநீருக்கும் தட்டுப்பாடு என அறிந்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். இதனால் முல்லை பெரியாறு - வைகை பாசனத் திட்டத்தில் சிவகங்கை,திருப்புத்துாரைச் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். அப்போது ஏரியூர் பகுதிக்கு மாணிக்கம் கால்வாய் மூலம் நீர்வரத்து இருந்தது.
1970 களில் பெரியாறு பாசனக்கால்வாய்களை நவீனப்படுத்தியதால் உபரிநீர் சிங்கம்புணரி ஒன்றிய கிராமங்களுக்கு விஸ்தரிப்பு கால்வாய் மூலம் வந்தது. தொடர்ந்து கடும் வறட்சியை சந்திக்கும் திருப்புத்துார் ஒன்றிய கிராமங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.
பின்னர் 1995ல் ரூ 21 கோடி செலவில் பெரியாறு விஸ்தரிப்பு 7 வது கால்வாயிலிருந்து எஸ்.எஸ்.கோட்டை, கருப்பூர், கோட்டையிருப்பு, நாட்டார்மங்கலம், திருவுடையார்பட்டி கண்மாய்கள் வழியாக திருப்புத்தூர் பெரியகண்மாய் வரை நீட்டிப்புக் கால்வாய் கட்டப்பட்டது.
அதன் பின்னர் சில ஆண்டுகளில் 3 முறை நீர் வரத்தும் இருந்தது. பின்னர் பெரியாறு அணை பராமரிப்பு காரணமாக அணையில் 132 அடியாக நீர் இருப்பு குறைக்கப்பட்டதால் திருப்புத்தூர் கால்வாய்களில் நீர்வரத்து நின்றது.
ஆனால் மீண்டும் 136 அடிக்கு அணையில் நீர் இருப்பு அதிகரிக்கப்பட்ட பின்னும் நீர்வரத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கால்வாய்கள் துார்ந்து விட்டன. கால்வாய்களில் இருந்த சிலாப்கள் திருடு போயின. பல இடங்களில் கால்வாய் தரை மட்டமாகி விட்டன.
இந்த ஆண்டு மழை பொய்த்தும், ஆறுகளில் நீர் வரத்துமின்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்று பாசன வசதியாக ஏற்படுத்தப்பட்ட பெரியாறு பாசன விஸ்தரிப்புக் கால்வாயும் சிதைந்து நீர்வரத்தின்றி உள்ளதால் இப்பகுதியில் விவசாயம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது
நாட்டார்மங்கலம் கிருஷ்ணன் கூறுகையில், முன்பு சிலமுறை இக்கால்வாயில் தண்ணீர் வந்தது. கடந்த 25 ஆண்டுகளில் நீர் வரவில்லை. இப்போது கால்வாயும் இல்லை. பாலாற்றில் அணைக்கட்டப்பட்டுள்ளது.
ஆனால் ஆறுகளில் நீர்வந்தும் 14 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இனிமேலாவது கால்வாயை புனரமைத்து, நிரந்தர நீர் வரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
நாட்டார்மங்கலம் சுப்பிரமணியன் கூறுகையில், கால்வாய் கட்ட இடம் கொடுத்தோம்.இதுவரை பணம் வரவில்லை.வயலுக்கு தண்ணீர் வர வாய்க்காலையும் மறைத்து இருந்த விவசாயத்தையும் கெடுத்ததுதான் மிச்சம்.
கால்வாய் சிதைந்து இப்போது பயனில்லாமல் போச்சு. இனிமேலாவது கால்வாயை புதுப்பித்து தண்ணீர் விடுவார்களா என்று ஆதங்கப்படுகிறார்.
மாவட்டத்தின் கடும் வறட்சிப் பகுதியாக பார்க்கப்படும் திருப்புத்துார் ஒன்றியத்தில் தேவையான பாசன நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்பு மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதியில் கூட சேர்க்கவில்லை. இந்நிலையில் முதல் நம்பிக்கையாக உருவான பெரியாறு மேம்பாடு திட்ட கால்வாயும் சிதைந்து பல ஆண்டுகளாகியும், விவசாயிகள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
அரசு கால்வாயை புனரமைத்து, நிரந்தர நீர் வரத்து கால்வாய் ஆக உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் விவசாயம் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

