ADDED : செப் 01, 2026 07:11 PM
சிங்கம்புணரி, செப். 2-
சிங்கம்புணரி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விறகு மற்றும் வேலிக்காக வெளிநாடுகளில் இருந்து விதையாக கொண்டு வரப்பட்டு துாவப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் மாநிலம் முழுவதும் காடு வயல் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து வளரத் தொடங்கியது. இம்மரங்களால் அருகே மற்ற மரங்கள் வளர்வது தடைபட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கம்புணரி பகுதியில் கோட்டை வேங்கைப்பட்டி, சதுர்வேதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. வனத்துறை சார்பில் அவ்வப்போது இவற்றை அகற்றிவிட்டு வேறு மரக்கன்றுகள் நட்டாலும் இன்னும் அப்பணி முழுமை அடையவில்லை. தொடர்ந்து இம்மரங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனால் அப்பகுதியில் வனப்பகுதிக்கு உரிய இயற்கையான அரிய வகை மரங்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு வனப்பகுதிக்கு சாதகமான புங்கன், வாகை உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும்.
