/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் கிடப்பில் வாகன காப்பகம் திட்டம்
/
கீழடியில் கிடப்பில் வாகன காப்பகம் திட்டம்
ADDED : நவ 11, 2024 04:15 AM
கீழடி: கீழடியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வாகன காப்பகம், ஓய்வறை உள்ளிட்டவைகள் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த 2023 மார்ச்சில் திறக்கப்பட்டது. தினசரி ஆயிரக்கணக்கான வரலாற்று ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கார், பைக், பஸ், வேன் உள்ளிட்டவற்றில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகின்றனர். அருங்காட்சியகத்தில் உள்ள 10 கட்டட தொகுதிகளில் ஆறு கட்டட தொகுதிகளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கீழடி அகழாய்வு பணிகள், பொருட்கள் குறித்த தொல்லியல் வல்லுனர்கள் பேட்டிகளுடன் குறும்படமும் ஒளிபரப்பபடுகிறது.
அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க குறைந்த பட்சம் 2 முதல் 4 மணி நேரம் ஆகும். அதுவரை வாகன டிரைவர்கள் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பும் இன்றி ரோட்டை ஒட்டியே நிறுத்துகின்றனர்.
இதை தவிர்க்க வாகன காப்பகம், டிரைவர்களுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்காக கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரசு புறம்போக்கு இடத்தில் உரிய வசதிகளுடன் கட்டடம் கட்டப்படும் என்றனர். ஆனால், ஓராண்டு கடந்தும் இங்கு எவ்வித பணிகளும் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.