/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதுகாப்பு இல்லாத காரைக்குடி சம்பை ஊற்று; அறிவிப்போடு நிற்கும் ரயில்வே மேம்பால பணி
/
பாதுகாப்பு இல்லாத காரைக்குடி சம்பை ஊற்று; அறிவிப்போடு நிற்கும் ரயில்வே மேம்பால பணி
பாதுகாப்பு இல்லாத காரைக்குடி சம்பை ஊற்று; அறிவிப்போடு நிற்கும் ரயில்வே மேம்பால பணி
பாதுகாப்பு இல்லாத காரைக்குடி சம்பை ஊற்று; அறிவிப்போடு நிற்கும் ரயில்வே மேம்பால பணி
ADDED : ஜன 21, 2025 05:54 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருவதை ஒட்டி பல்வேறு அடிப்படை வசதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்றை பாதுகாத்தல்,செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துதல், அறிவிப்போடு நின்ற கோட்டையூர் பேரூராட்சி ஸ்ரீராம் நகர் ரயில்வே மேம்பால பணி துவக்க நடவடிக்கை, நுாறாண்டை கடக்க உள்ள ரயில்வே பீடர் ரோடு,
பாரம்பரிய சிமென்ட் சாலை பாதுகாக்கப்பட வேண்டும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளது.
சாக்கடையான சம்பை ஊற்று
சமூக ஆர்வலர் திருஞானம்: காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காரைக்குடியின் முக்கிய நீர் ஆதாரமாக சம்பை ஊற்று உள்ளது. சம்பை ஊற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம், ஒன்றரை லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சம்பை ஊற்றுப் பகுதியில் 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 1 லட்சத்து 40 குடும்பத்திற்கு 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகம் செய்யப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுவை மிகுந்த தண்ணீராக இருந்த சம்பை ஊற்று, இன்று கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் சுவை மாறியதோடு தரமும் மாறி வருகிறது. சம்பை ஊற்றின் அருகில் வீடுகள் கட்டவோ, கழிப்பறை கட்டவோ, நீர் உறிஞ்சும் நிலையங்கள் அமைக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி நாளுக்கு நாள் புதிய கட்டடங்கள், நீர் உறிஞ்சும், வாட்டர் சர்வீஸ், கார் சர்வீஸ் சென்டர்கள் புற்றீசல் போல பெருகி வருகிறது.
மேலும் சம்பை ஊற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு கட்சியினரும், தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் வாக்குறுதி வெறும் அறிவிப்பாகவே போனது.இதுவரை சம்பை ஊற்றை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திரைப்பட நகராக்குதல்
சாமி திராவிட மணி, தொழில் வணிகக் கழகத் தலைவர்: பாரம்பரிய நகர் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை எம்.பி., கார்த்தி, நாடாளுமன்றத்தில் செட்டிநாடு விமான நிலையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் விமானத் துறை அமைச்சர் தமிழக அரசிடமிருந்து தகவல் வராததால் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், காரைக்குடியில் சினிமா மற்றும் சின்னத்திரை தொடர் அதிகளவில் எடுக்கப்படுகிறது. எனவே, காரைக்குடியை திரைப்பட நகரமாக்க வேண்டும்.
பாரம்பரியம் காக்க வேண்டும்
முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம்: பாரம்பரிய சிமென்ட் சாலையை சுற்றுலாச்சாலையாக அறிவிக்க வேண்டும்.
காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு 1931ம் ஆண்டு செட்டி நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட பழமையான சிமென்ட் சாலை ஆகும். 95 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை சேதம் ஏற்படாமல் உள்ள இச்சாலை, பழமையான, பாரம்பரிய சாலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக சிமென்ட் சாலை உடைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு சமூக அமைப்பினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் சாலை தொடர்ந்து உடைக்கப்படுகிறது. நுாறு ஆண்டுகளைக் கடக்க உள்ள சிமென்ட் சாலையை, முதல்வர் ஸ்டாலின் பாரம்பரிய சுற்றுலாச்சாலையாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்.
அறிவிப்போடு நிற்கும் பாலம்
ரத்தினம், கோட்டையூர்: கோட்டையூர் பேரூராட்சியில் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே கேட்டில், சென்னை திருச்சி மார்க்கமாக தினமும் 8க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அழகப்பா பல்கலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு தினமும் கானாடுகாத்தான் பள்ளத்துார் கோட்டையூர் கண்டனுார் புதுவயல் அறந்தாங்கி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
தவிர பள்ளத்துார் கண்டனுார் புதுவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பல மாநிலங்களில் இருந்து தினமும் நெல் மற்றும் அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகம் வந்து செல்கின்றன.
ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேட்டின் இருபுறமும் வரிசை கட்டி காத்துக் கிடக்கின்றன.
மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு சரி. இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. மேலும் கோட்டையூர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள இப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

