/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பிடாவூரில் குவாரி அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
/
மேலப்பிடாவூரில் குவாரி அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
மேலப்பிடாவூரில் குவாரி அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
மேலப்பிடாவூரில் குவாரி அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : ஜன 30, 2024 01:43 AM

சிவகங்கை : மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பாதையில் கிராவல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் மறவன், பெரிய கண்மாய் இரு கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களுக்கு மழை காலங்களில் சேகரமாகும் மழை நீர் வருவதற்கு ஏற்ப 95 ஏக்கரில் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் 15 ஏக்கரில் கிராவல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இங்கு கிராவல் மண் குவாரி ஏற்படுத்தினால், மறவன், பெரிய கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய் சேதப்படுவதோடு, மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கண்மாய்களுக்கு நீர் வரத்து இன்றி, பாசன கண்மாய் வறண்டு விடும் அச்சம் இருப்பதாக கூறி மேலப்பிடாவூர் கிராமத்தினர் கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு பின்னரும், குவாரி அமைப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதில் அதிருப்தியான மேலப்பிடாவூர் கிராம மக்கள், விவசாயிகள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர். அவர் உதவி இயக்குனர் (கனிமவளம்) விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
குவாரியால் விவசாயம் பாதிப்பு: மேலப்பிடாவூர் விவசாயி மகேந்திர பூபதி கூறியதாவது: மறவன், பெரியகண்மாய் ஆகிய இரண்டும் தலா 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்கள் மூலம் 1200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த கண்மாய்க்கு வரும் நீர்பிடிப்பு பகுதியில் கிராவல் மண் குவாரி அமைத்தால், கண்மாய்க்கு நீர்வரத்தின்றி, விவசாயம் பாதிக்கும்.
இதை தடுக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம். கிராவல் மண் குவாரிக்கு தடை விதிக்காவிடில், கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.