ADDED : டிச 16, 2024 02:30 AM

தென்காசி: தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருவாரணப்பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன், கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் சபரிமலை சீசனில் 10 நாட்கள் மகோற்ஸவ திருவிழா நடப்பது வழக்கம். அச்சன்கோவில் உற்ஸவ விழா இன்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் ஐயப்பன், கருப்பசுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள மாநிலம், புனலுார் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அது பலத்த பாதுகாப்புடன் அச்சன்கோவில், ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனலுார், அச்சன்கோவில் கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் அமைந்திருப்பதால், பாதுகாப்பு கருதி தென்காசி மாவட்ட எல்லை வழியாக கொண்டுசென்றனர். நேற்று பகலில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக கொண்டுவரப்பட்ட திருவாபரணப்பெட்டிக்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனர். ஆபரணப் பெட்டியில் ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள், கால்கள், கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன.
அச்சன்கோவிலில் டிச., 24ல் தேரோட்டமும் டிச., 25ல் ஆராட்டு விழாவும் நடக்கிறது.

